
இயற்கை நமக்குத்தந்த இச்சூழலில் வெப்பமயமாதல் விளைவின் காரணமாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மழையில்லாமல் இயற்கை வஞ்சித்து வருவதால் ஆறு, குளம், குட்டை, ஏரி, கண்மாய் என்ற நீர் நிலைகள் எல்லாம் வற்றிக் காயந்து கிடக்கிறது. முதலில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்ற நிலை மாறி, இப்போது குடிக்கவே தண்ணீர் இல்லை என்ற நிலையை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பேரில், புதுப்புது பெயரில் குடிநீர்களை குப்பியில் அடைத்து வைத்து வியாபாரம் செய்து வருவது ஒருபுறம் என்றால், கிராமத்தில் கூட அந்த நிலையை மக்கள் அனுபவிக்கின்றனர் எனும்போது வருத்தமாகவே இருந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் மழையின்மை காரணமாக ஆழ்துளைக் கிணறுகள் மூலம் அதிக நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
தற்போது தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருப்பூர், நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய இருபது மாவட்டங்களில் ஒரு ஆண்டில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இவற்றுக்கு மாறாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், கரூர், நாகை, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நிலத்தடிநீர் மட்டம் சற்று அதிகரித்துள்ளது என்பது ஆறுதலான விடயமாக உள்ளது.

சாதாரணமாக இந்த முள் மரங்கள் தமிழகத்தின் மூலை, முடுக்கு, இண்டு இடுக்கெல்லாம் விளைந்து நிற்பதைக் காணலாம். மண்ணில் அதிக நீரை உறிஞ்சி நிலத்திற்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வேலிகாத்தான் முள் மரங்களை ஆணிவேரோடு வெட்டி வீழ்த்தி விட்டால் கூட ஓரளவு நிலத்தடி நீர் வளம் பாதுகாக்கப்படும்.
இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல குடிநீரே கிடைப்பதில்லை. பல இடங்களில் நீரானது உப்புத் தன்மை வாய்ந்ததாகவே உள்ளது. மறுபுறம் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. அப்படியே பெய்தாலும் நிலத்தடி நீரைப் பெருக்க போதிய கட்டமைப்பு இங்கு இல்லை.
தமிழகத் தலைநகரான சென்னையிலும், ராமநாதபுரத்திலும் கடலுக்குப் போய் விரயமாகும், நீரின் அளவு அதிகம். ஆனால் நிலத்தடி நீரைப் பொதுமக்கள் பயன்படுத்துவதிலும், வியாபார நோக்கில் பலர் மிகுதியாக நீரை உறிஞ்சுவதிலும் காட்டுகிற அக்கறையை நிலத்தடி நீரைப் பெருக்குவதில் காட்டுவதில்லை.
அடுத்த 15 ஆண்டுகளில் நம் நாட்டில் 60 சதவீத நிலத்தடி நீர் வற்றிப் போகும் நிலை உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. நம்நாடு விவசாய நாடு என்பதால் ஆற்றுநீர் பாசனத்தை விட நிலத்தடி நீர் மூலம் தான் அதிகம் பயிர்சாகுபடி செய்யப்படுகிறது. இன்று இங்கு நகரங்களில்தான் நிலத்தடிநீர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. உலகிலேயே நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்துவது நம் நாடுதான் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
நம்நாட்டில் 5,723 நிலத்தடி நீர் பாதைகள் உள்ளன. இவற்றில் 1615 பாதைகளில் நீரோட்டம் குறைந்துவிட்டது. இதில் 108 பாதைகள் அதிக அளவில் நீர் உறிஞ்சப்பட்டதால் வற்றிப்போய்விட்டன.

விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த மக்கள் இப்படிப்பட்ட துயரை அடைவார்கள் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இயற்கையின் விளையாட்டில் விவசாயிகள் இவ்வாறு பந்தாடப்பட்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment